ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடர் எதிர்வரும் வருடம் பெப்ரவரி 28 தொடங்கி மார்ச் 25ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதில் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை வெளிவரவுள்ளது. அத்துடன் ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதிகள் (special procedures) 21 பேர் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். அதாவது ஐ.நா சுயாதீன வல்லுனர்கள் (UN Independent expert), ஐ.நா செயற்குழு உறுப்பினர்கள்(UN working Group members) ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் (UN special rapporteur) போன்ற வகையினரை ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதிகள் (special procedures) என கூறுவார்கள். இவர்களுடைய அறிக்கைகள் தமிழர்களின் இன அழிப்பு குறித்தும் தொடர்ச்சியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அமைய வேண்டுமாக இருந்தால் தமிழ் சிவில் சமூக அமைபுக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் என அனைவரும் பாதிப்புக்கள் மற்றும் கோரிக்கைகளை தனித்தனியாக அதிகமான எண்ணிக்கையில் எதிர்வரும் டிசம்பர் 20 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும். அதேபோன்று 49வது கூட்டத்தொடருக்கான எழுத்துமூல அறிக்கைகளினை யனவரி 20 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும். இவ் எழுத்துமூல அறிக்கைகள் ஐ.நா வின் அங்கீகாரம்பெற்ற( ECOSOC) அமைப்புகளின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரமே கூட்டத்தொடரின் உத்தியோகபூர்வ ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும். அதனடிப்படையில் மனித உரிமைகள் தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நா வின் அங்கீகாரம்பெற்ற( ECOSOC) அமைப்புகளின் ஊடாக சமர்ப்ப்பிப்பதற்கு எம்முடன் தொடர்புகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு நாம் இலங்கைக்குள் தொடர்ந்தும் அடக்கு முறைக்குள் வாழ்ந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளில் இடர்களை சந்திக்கும் தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
உதாரணமாக மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள்,சிவில் சமூக சேவை அமைப்புகள் அனைவரும் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்து எம்மூடாக 1450 சொற்கள் நிறைந்த எழுத்துமூல அறிக்கைகளை ஐ.நா வின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
2009 இல் தமிழர்கள் மீதி நடத்தப்பட்ட இனவழிப்பு போரின் போதும் சரி இப்போதும் சரி சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள் தான். தங்களின் குடும்பத்தலைவர்களையும் ஆண் பிள்ளைகளையும் உயிரோடு சிங்கள இராணுவத்திடம் கையளித்து விட்டு இன்று வரை அவர்களுக்காக காத்துக்கொண்டு தான் இன்றும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆனால் வீதிகளில் செய்யும் போராட்டங்கள் தெருமுனையிலேயே முடிந்து விடுகின்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தங்களது போராட்டத்தின் கனதியை முக்கியத்தன்மையை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பெண் உரிமை சார்ந்த செயற்பாடுகளே உலகத்திலேயே முதலாவது செயற்பாடாக அமைந்துள்ளது. ஐ.நா 17 இலக்குகளை நிர்ணயித்து செயற்படுகிறது. அவை அனைத்திலும் பெண் உரிமை சார்ந்த விடயங்களே முக்கியத்துவம் பெறுகின்றது.
எமது விடுதலைப் போராட்ட காலத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது உலகத்திற்கே முன்மாதிரியாக திழ்ந்தது. தற்போதைய சூழலிலும் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதிகளவில் பெண்களே வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடி வருகிறார்கள். ஆனால் அனைத்துலக பொறிமுறைகளின் கீழ் எமது தமிழ் பெண்களின் வகிபாகம் என்பது மற்றைய போராடும் இனங்களுடன் ஒப்பிடும் போது குறைந்தளவிலேயே உள்ளது.
இவ்வாறானதொரு சூழலில் தாயகத்தில் வாழும் பெண்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எழுத்து மூல அறிக்கைகளை இலங்கையில் அமைந்திருக்கும் பன்னாடுகளின் தூதுவரலாயங்கள் மற்றும் ஐ.நா விற்கான வதிவிவிடப் பிரதிநிதி ஆகியோருகு தொடர்ச்சியாக அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்வதுடன்,அவற்றின் பிரதிகளை எமக்கும் அனுப்பிவைத்தால் நாம் அவற்றை உரிய இடங்களுக்கு அனுப்பிவைப்போம்.
தனியே ஐ.நா வில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது அல்லது விவாதிக்கப்படும் போது அதற்குரிய காலவரையறை முடிந்த பின்னர் அறிக்கைகள் அனுப்புகிறோம் என ஊடகச் செய்தியாக்குவது அல்லது முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் விமர்சகர்களாக ஊடகங்களில் கருத்துக்கள் சொல்லவதனால் எதனையும் சாதிக்க முடியாது. என்பதை விளங்கிக்கொண்டு சரியான வகையில் பொறிமுறைகளை உள்வாங்கி ஐ.நா.வின் அனைத்து பொறிமுறைகளிலும் நான் பெரிது நீ பெரிது என விவாதித்துக் கொண்டிருக்காமல் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுத்தால் மாத்திரமே எமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்ளலாம்.
அந்தவகையில் ஐ.நா அறிக்கைகள் எமது பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் வகையில் எமக்கு பலமானதாக அமையவேண்டுமாக இருந்தால் ஐ.நா வின் அனைத்து பொறிமுறைகளையும் சரியான வகையில் உள்வாங்கி காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்புகள் ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஒப்பந்த அமைப்புகள் (treaty bodies) ஆகியவற்றிற்கு தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் முறைப்பாட்டு அறிக்கைகளை அனுப்பிவைக்க வேண்டும். உதாரணமாக மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கான தரவுகள் ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஒப்பந்த அமைபுக்களின் பிரதிநிதிகளின் அறிக்கைகளிலிருந்தே திரட்டப்படுகின்றன. அதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 46வது கூட்டத்தொடரில் வெளிவந்த ஆணையாளரின் அறிக்கை தமிழர்களான எமக்கு சற்று ஆறுதலாக அமைந்திருந்தது. அதில் ஐ.நா வின் அறிக்கைகளில் தமிழ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதுடன் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு காரணம் கடந்த வருடம் முழுவதும் ஈழத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய வன்முறைகள் தொடர்பில் 350 இற்கும் மேற்பட்ட தனிப்பட்ட முறைபாடுகளை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பெற்று உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயற்படும் ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளினூடாக மேலே குறிப்பிட்ட பொறிமுறைகளில் வழக்குகளாக பதிவுசெய்ததே ஆகும். மேலும் சிறப்பம்சமாக எமது பிரச்சினை தொடர்பில் முதன்முறையாக ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளர்கள் ஒன்றிணைந்து கடந்த பெப்ரவரி மாதம் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை நாம் பலதடவைகள் எடுத்துக்கூறியும் தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட தரப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினரிடம் இருந்தும் எவ்வித அறிக்கைகளும் எமக்கு கிடைக்கவில்லை.
ஆனால் சிங்களம் மற்றும் முஸ்லிம் தரப்பினரால் வழமைபோன்று பல அறிக்கைகள் ஐ.நா பொறிமுறைக்குள் தொடர்ந்தும் பதிவேற்றப்பட்டுக் கொண்ருக்கின்றன.
அதனடிப்படையில கடந்த 48வது கூட்டத்தொடரில் வெளிவந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை நாங்கள் எதிர்பார்த்தது போல் கனதியாக இருக்கவில்லை. இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே என பாதிக்கப்பட்டவர்களை அடையாளங்காட்டத் தவறிய ஓர் பலவீனமான அறிக்கையாகவே இது இருந்ததை நாங்கள் பல அரங்குகளில் அதிருப்பதியோடு தெரிவித்திருந்தோம்.
இப்படியொரு பூசு மெழுகலை அனைத்துலகம் தமிழர்கள் மேல் அவசர அவசரமாகத் திணிக்கப் பார்ப்பதை நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. இது மென்மேலும் சிறீலங்கா அரசு கால அவகாசத்தையே கொடுக்கும். இதுபோன்ற ஏமாற்றங்கள் தொடர்ந்தும் எமக்கு வராமல் இருக்க வேண்டுமென்றால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகளாகவே தமிழ் செயற்பாட்டாளர்கள் அனைத்துலக அரங்கில் எதிரொலிக்க வேண்டுமேயொழிய நாடுகள் எதிர்பார்க்கின்ற இராசதந்திரிகளாக தங்களைத் தாங்களே கற்பனை பண்ணிக்கொண்டு செயற்படக்கூடாது.
வேலை செய்யாமலே சம்பளம் கிடைக்குமென எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள் தனமோ அதுபோலதான் பாதிப்புகளை போதிய அளவு அறிக்கைப்படுத்தாமல் ஐநா வின் அறிக்கைகளை அண்ணார்ந்து பார்த்திருப்பது.
இவற்றைக் கருத்தில்கொண்டு அனைத்து பொது அமைப்புகளையும், தனி நபர்களையும், விடுதலை விரும்பிகளையும் தமிழர்களின் நீதிக்கான செயற்பாடுகளிற்கு வலுச்சேர்க்க உரிமையுடன் அழைப்பதுடன் தங்கள் தார்மீக ஆதரவை வழங்குமாறு அன்புரிமையுடன் அழைப்புவிடுக்கின்றோம்.
நன்றி
உலகத் தமிழர் இயக்கம்











