தொடரும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு உலகத் தமிழினம் வீச்சுடன் முன்னகர
வேண்டும்!!!
தமிழீழம் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் திட்டமிட்ட இனவழிப்பிற்கு எதிராக தமிழீழ மக்கள் அரசியல் வழியில் தமது சனநாயக போராட்டங்களை நடத்திய போது அப்போராட்டங்களை சிறீலங்கா இனவழிப்பு அரசு ஆயுதம் கொண்டு அடக்கியது. நிராயுத பாணிகளாக நின்ற தமிழீழ மக்கள் தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிலிருந்து தம்மை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்து சனநாயக வழிகளும் முற்றாக முடக்கப்பட்ட சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
ஓர் இனம் அனைத்து சனநாயக வழிகளும் மறுக்கப்பட்ட சூழ்நிலையில் தம்மைத் தற்பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்தலாம் என்பது ஐ. நா வின் சரத்துக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும் (GAR 1514 -1960, GAR 2625 – 1970, GAR 2908 -1972, Protocol 1 of the Geneva Conventions – 1977 Paragraph 4, Article 1).
உலகளாவிய சட்ட திட்டங்களையும், சனநாயக விழுமியங்களையும் தமது போராட்ட செயல் நெறியில் பின்பற்றி தமிழீழ மக்கள் முன்னெடுத்த தேசிய இன விடுதலைப் போராட்டமானது சிறீலங்கா இனவழிப்பு அரசினால் பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு பன்னாட்டு வல்லாதிக்க சக்திகளின் பேராதரவுடன் ஓர் இனவழிப்பு யுத்தம் ஊடாக அழித்தொழிக்கப்பட்டது. 2009 மே 18 வரை எமது தாயகத்தில் நிலையுற்றிருந்த தமிழீழ அரசை சிதைத்து தமிழர்களினால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த தமிழீழ இறையாண்மையை அழிப்பதையே இவ் இனவழிப்பு யுத்தம் தனது இலக்காக கொண்டிருத்ந்தது. இந்துமா சமுத்திரத்தை ஒட்டிய தமது பூகோள அரசியல் இலாபங்களிற்காக பல உலக வல்லாதிக்க நாடுகளும் தமிழீழ அரசையும், தமிழ் இறையாண்மையையும் ஓர் இனவழிப்பு யுத்தம் ஊடாக அழித்தொழிப்பதற்கு துணை நின்றனர். இவற்றை தட்டிக்கேட்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் இவ்வுலகில் எவரும் முன்வரவில்லை. இவ் 21 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தேறிய இவ் மனிதப்பேரவலமானது மானுடமே வெட்கித் தலைகுனியவேண்டிய விடையமாகும்.
இவ் இனவழிப்பு யுத்தத்தால் பல இலட்சம் உயிர்களை தான் பலியெடுக்க முடிந்ததே தவிர எமது உயிரிலும் மேலான எமது தேசிய இனவிடுதலைக்கான இலட்சியத்தை அல்ல என்பதை இந்த தமிழினவழிப்பு நினைவுகளை சுமந்த விழிப்புணர்வு நாட்களில் இவ்வுலகத்திற்கு நாம் இடித்துரைக்க விரும்புகின்றோம். முள்ளிவாய்க்கால் நிலம் உட்கொண்ட உயிர் விதைகள் கந்தகக் காற்றுக்குள் தம் இறுதி மூச்சை அணைக்கும் வரை எம்மினத்தின் மீதான இனவழிப்பிற்கு எதிரான விடுதலைப்போரட்டத்தையும், அதன் பால் நாம் ஈட்டிய இறையாண்மையையும் சரணாகதியாக்காது ஓர் வரலாற்றுக் கோட்பாட்டை வகுத்தே விதையாகினர். அக்கோட்பாடானது நாம் சாகலாம், நாங்கள் சாக மாட்டோம், போராட்டம் தொடரும் என்பதே. அடக்குமுறையாளர்களின் ஆயுத ஏகபோகத்திற்கு நாம் எமது கோட்பாடுகளை சரணாகதியாக்கமாட்டோம் என்பதே ஆகும். அக்கோட்பாடானது இன்று கட்டம் கட்டமாக எம்மினத்தின் அடுத்த தலைமுறையின் இணைவுடன் வலுப்பெற்றே வருகின்றது. புதிய உலக ஒழுங்கில் போராடும் இனங்களின் வழிகாட்டல் கோட்பாடாக எம் தேசத்தின் விடுதலை சார் கோட்பாடு வழி நடத்திச் செல்லும் என்பதில் எமக்கு ஐயம் இல்லை.
இவ்வாறாக இன்றும் தமிழினவழிப்பு தொடரும் வேளையில், உலக சமூகமோ, ஐ. நா போன்ற நிறுவனங்களோ சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான தமிழினவழிப்பை இனவழிப்பாக ஏற்கமறுப்பதானது சிறீலங்கா அரசு பயமின்றி தமிழினவழிப்பை தொடர்வதற்கு வழிகோலுகின்றது. அத்துடன் இறுதியாக ஐக்கிய இராச்சியத்தின் தலைமையில் ஐ.நா மனிதவுரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானம் கூட தமிழ் மக்களிற்கு பலத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது. கொடிய இனவழிப்பை மனித உரிமை மீறல்கள் எனப் பலவீனப்படுத்தி குற்றவாளியான சிறீலங்கா அரசிடமே பொறுப்புக் கூறலை பாரப்படுத்தியது உலக நீதிக்கோட்பாடுகளிற்கே முரணான நிலைப்பாடாகும். இச் செயற்பாடானது பாதிக்கப்பட்ட சமூகங்கள் இவ்வாறான நிறுவனங்கள் மீது அவநம்பிக்கை கொள்ளவே வழிவகுக்கும்.
இத்தகைய ஓர் சூழலில் பேரினவாத சிறீலங்கா அரசின் இனவழிப்பு இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுச் சுடரேற்றும் பீடத்தினை சிறீலங்கா அரச படையினர் மே மாதம் 13ம் திகதி வியாழக்கிழமை அதிகாலையில் சிதைத்து அழித்திருக்கிறார்கள். அதற்கு முன்னைய நாள் மாலையில் தமிழினப்படுகொலை நினைவு நாளில் திரை நீக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட நினைவுக் கல்லை நிறுவவிடாது சிறீலங்கா இராணுவத்தினரும், பொலிசாரும் தடுத்து நிறுத்தியிருந்த நிலையில் இரவோடு இரவாக அந்தப் பிரதேசத்தை முழுமையாகச் சுற்றிவளைத்து இரவின் மறைப்பின் கீழ் தமிழர் இனவழிப்பு நாளின் நினைவுகூரலுக்கான கட்டமைப்பினை உடைத்து சேதப்படுத்தியதுடன் முன்னைய நாள் மாலை எடுத்துச் செல்லப்பட்டிருந்த நினைவுக் கல்லினையும் காணாமல் செய்துள்ளனர். இதற்காக சிறீலங்கா படையினர் நினைவேந்தல் வளாகத்தினுள் பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியினைச் சென்றடைய புதன் இரவு 10:30 மணியளவில் எத்தனித்த ஊடகவியலாளர்கள் ஆயுதம் தரித்த சிறீலங்கா அரச படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தப் பிரதேசத்துக்கான நான்கு வீதிகளும் மூடப்பட்டதுடன் யாரும் உள்நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மறுநாள் காலையில் உட்செல்ல அனுமதிக்கப்பட்டபோது உடைக்கப்பட்ட நினைவுத் தூபியின் சிதைவுகளையே கண்டார்கள். வெளிநோக்கி நீட்டப்பட்ட இரண்டு மனிதக் கைகளைக் கொண்டதான இந்த நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டு அருகிலிருந்த மணல் பகுதியில் வீசப்பட்டிருந்தது. மேலும் பன்னிரண்டாவது ஆண்டு நினைவாக நிறுவுவதற்காக கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த விசேட வாசகங்கள் செதுக்கப்பட்ட நினைவுக்கல் முழுமையாக காணாமற் போயிருப்பதையும் அவதானித்தார்கள்.
தமிழர் தாயகப் பகுதிகளில் உச்சப்படுத்தப்பட்டிருக்கும் கடுமையான அச்சுறுத்தல்கள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் தமிழின அழிப்பு நாள் நினைவேந்தலுக்கான முன்னேற்பாடுகளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினர் முன்னெடுத்து வந்திருந்த சூழலில் தமிழின அழிப்பின் 12வது ஆண்டு நினைவான மே மாதம் 18ம் திகதிக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கையில் இந்த அராயகம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
தமிழினத்தை அழித்த நாளை வெற்றி நாளாக கொண்டாடும் சிறீலங்கா அரசு அதே நாளில் இறுதிக் கட்ட இனவழிப்பு யுத்தத்தில் இறந்த தமது சொந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு தமிழ் மக்களுக்கு தடைவிதித்து வருகின்றது . பல உயிர் அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் மக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்து வரும் நினைவேந்தல்கள் எமது தேச ஆன்மாவின் உட்கிடக்கையை தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்து நிற்கின்றது.
கடந்த ஏழு தசாப்தங்களிற்கு மேலாக சிறீலங்காவின் இனவழிப்பு அரசாங்கத்தினால் ஈழத்தமிழர்கள் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். கறுப்பு ஜூலை 1983 மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலை 2009 என்பன ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புக்கான முக்கிய புள்ளிகளாகும். இனவழிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் அடையாளம் காணப்படுவதும் அங்கீகரிக்கப்படுவதும் பேசப்படுவதும் முக்கியமானவை. மியன்மாரின் றொகிங்கியா மக்கள் போலவே தமிழீழ மக்களுக்கும் சிறீலங்கா ஆக்கிரமிப்பாளர்களால் நீண்ட காலமாக இழைக்கப்பட்டுவரும் அட்டூழியங்களுக்கும் இனவழிப்புக்கும் எதிரான பன்னாட்டு பொறிமுறைகளினூடான ஈடுசெய் நீதியினை பன்னாட்டு சமூகத்திடம் வலியுறுத்துகிறோம். சர்வதேசமும் உலகநாடுகளும் சிறீலங்கா அரசின் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன் ஈழத்தமிழ் மக்களிற்கான நீதியை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர முன்வரவேண்டும்.
இத்தகைய இடர்கள் நிறைந்த ஓர் இக்கட்டான காலகட்டத்தில் உலகத் தமிழர்கள் தமிழினவழிப்பிற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைக்காகவும் முன்னெற்போதும் இல்லாத உத்வேகத்தோடு, ஒன்றுபட்ட தேசியச் சக்தியாக வீச்சுடன் முன்னகர வேண்டும். ஒன்றுபட்ட மக்களின் திரட்சியே போராட்ட எழுச்சியாக பரிணாமம் பெறும்.
தொடரும் திட்டமிட்ட தமிழினவழிப்பில் மே 18 என்பது ஓர் உச்சகட்ட கொலைவெறித் தாண்டவம் அரங்கேறிய நாளாகும். இந்த நாளில் எமது தேசம் இன்றும் எதிர்கொள்ளும் கட்டமைப்பு சார் தமிழினவழிப்பை வெளிக்கொணரவும், இது நாள் வரைக்கும் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவில் கொள்ளவும் எம்மை செப்பனிட்டு எமது தேச விடுதலை நோக்கி வீச்சுடனும் எழுச்சியுடனும் முன்னகரவும் நாம் உறுதியேற்போமாக.
– தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம் –
18.05.2021 – மே 18 அறிக்கை_உலகத் தமிழர் இயக்கம்














