46th Session of the Human Rights Council|GD item 3|Assocition Thendral|Mr.Ramesh Govindasamy
நீட் தேர்வு மக்களாட்சிக்கு விரோதமானது ஐ.நா வில் எடுத்துரைப்பு!
பெப்ரவரி 22ம் திகதி தொடங்கிய ஐ.நா மானிட உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுத் தளங்களில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இணையவழி ஊடாக கூட்டத்தொடரில் இணைந்து கொண்டு தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்
அந்தவகையில் 10/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் தென்றல் அமைப்பு ( Association Thendral ) சார்பாக உரையாற்றிய ரமேசு கோவிந்தசாமி அவர்கள் தனது உரையில்,
நாடு முழுவதும் ஒரே மருத்துவ கல்விமுறையைக் கொண்டு வருவதற்கு நீட் என்ற நுழைவத்தேர்வு முறையை மருத்துவத் துறையில் 2013 ஆண்டு இந்திய ஒன்றிய நடுவண் அரசு அறிமுகம் செய்தது. இந்த தரப்படுத்தும் தேர்வு முறையால் விக்னேசு ஆதித்யா, ஜெயஸ்ரீ, மோதிலால் போன்ற 13 மாணவர்களின் உயிரைப் பறித்தனர். பல்வேறு கல்வி தரப்படுத்தும் முறை இருக்கும்போது புதிதாக நடுவண் அரசின் பாடதிட்டத்தின்கீழ் தேர்வு நடத்துவது சரியான முறையல்ல. பிற பாடத்திட்டத்தின்கீழ் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதமுடியாது.
இந்த தேர்வுக்கு பயிற்சி தரும் மைய்யங்கள் அதிக தொகை வாங்குகின்றன. அதனால் இந்தப் பயிற்சி மைய்யங்கள் பணக்காரங்களுக்கும், நகர மக்களுக்கும் உதவிசெய்கின்றன. கொடுக்கப்பட்ட உள்கட்டமைப்புகளாலும், பற்றாக்குறையான பொருளாதார நிலையாலும் ஊர் மாணவர்கள் இந்த தேர்வை எழுத மிகவும் கடினப்படுவர். அடுத்த முறை தேர்ச்சியடைய முடியுமா? என்று நினைப்பது அதிக மனஇறுக்கத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கூட்டமைப்புதான் இந்திய ஒன்றியத்தின் அடிப்படை அமைப்பாக இருக்கிறது. எனவே ஒரே மருத்துவ நுழைவு தேர்வுமுறை மக்களாட்சிக்கு எதிரானது. ஆகவே மாணவர்களுக்கு அநீதி செய்யும் மக்களாட்சி விரோத நுழைவுத்தேர்வை நீக்க இந்த மனித உரிமை பேரவை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டார்.










